#1009 சொந்த வீட்டில் குடும்ப ஜெபத்தின் பொழுது, கணவன் முன்னிலையில் அவரது மனைவி ஜெபத்தை ஏறெடுக்கலாமா?

#1009 *சொந்த வீட்டில் குடும்ப ஜெபத்தின் பொழுது, கணவன் முன்னிலையில் அவரது மனைவி ஜெபத்தை ஏறெடுக்கலாமா?*

*பதில்* : பிரதானமாக, எச்சூழ்நிலையிலும் ஆண்களுக்கு பெண்கள் போதிக்க வேதம் இடமளிக்கவில்லை. அது யோக்கியமான செயல் அல்ல என்றும் அப்பட்டமாக அதை அயோக்கியம் என்று வேதம் சொல்கிறது. 1கொரி. 14:35.

மேலும், 1 கொரிந்தியர் 14ம் அதிகாரம் வீட்டுச் சூழலை அல்ல, அது சபையாக ஜனங்கள் கூடியிருக்கும் போது ஏறெடுக்கப்பட்ட தொழுகையின் பகுதியைக் குறித்ததாகும். (1கொரி. 14:23).

கணவன், இரட்சிக்கப்படாதவனாயிருக்கும் பட்சத்தில்கூட மனைவி அவனுக்கு போதனை செய்யலாம் என்று வேதம் கற்பிக்கவில்லை. அதை குறிப்பாக பேதுரு அப்போஸ்தலன் தனது நிருபத்தில் எழுதியுள்ளார்.  

1பேதுரு 3:1-2 அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, *போதனையின்றி*, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்

*போதனையின்றி* மனைவி தனது நடக்கையினாலேயே தன் கணவனை ஆதாயப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் !!

பிள்ளையாய் இருந்தபொழுது, தீமோத்தேயுவை அவனது தாயும், பாட்டியும் தேவனுக்குள் வழிநடத்தியிருக்கவேண்டும். 2தீமோ. 1:5, 1தீமோ. 4:12

பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கத்துடனிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளவேண்டியது. உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், பெண்களுக்கு வேதம் அனுமதி கொடுக்கவேயில்லை என்பது தெள்ளத்தெளிவு. 1தீமோ. 2:11-12

தங்களது சந்தேகங்களை சபையின் நடுவே அல்ல, தங்கள் வீடுகளில் ஆண்களிடத்தில் பெண்கள் கேள்விகள் கேட்க தடையில்லை. 1கொரி. 14:35

ஒருவர் ஜெபம் ஏறெடுக்கிறார் என்றால் அனைவரும் கூடியிருக்கும் பொழுது *மற்றவர்களது சார்பாக* அவர் அந்த ஜெபத்தை பிதாவிடம் ஏறெடுக்கிறார். அங்கு கூடியிருப்பவர்களை ஜெபத்தில் வழிநடத்துகிறார்.
அதாவது, முன்னின்று ஜெபிப்பவர் கேட்பவர்களை வழிநடத்துகிறார். அதில் அதிகாரம் உள்ளது !! அந்த அதிகாரம் ஆண்கள் மீது செலுத்த பெண்கள் அதை எடுக்க வேதம் இடம் கொடுக்கவில்லை. 1தீமோ. 2:12-14ல் பவுல் ஏன் என்பதை விளக்கியுள்ளார்.

மேலும், 1கொரிந்தியர் 11ம் அதிகாரம் 3ம் வசனம் இதற்கான நீதியை தெளிவுபடுத்துகிறது: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்”.

ஆகவே, இரத்தசம்பந்தம் என்றோ, கணவனுக்கு கோர்வையாக அல்லது இலக்கியமாக ஜெபிக்க தெரியாது என்றோ, வயதில் மூத்தவர் என்றோ, வசனம் அருமையாய் அடுக்கடுக்காய் சொல்வார்கள் என்றோ அல்லது வேறு எந்த காரணத்தை முன்னிட்டும் எச்சூழ்நிலையிலும் தங்கள் வீடுகளானாலும்; பெண்கள் “ஆண்களுக்கு சார்பாக” ஜெபிக்க வேதம் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் – கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*—-*—-*—-*—-*—-*—–*